இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் - பிரையன் லாரா

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 4 அரைசதங்களுடன் 480 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் அவருக்கு ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டது மனதளவில் வேதனையை ஏற்படுத்தியது என்று அவரே வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சியில் பேசுகையில், ஆஸ்திரேலிய தொடருக் கான இந்திய அணியை பார்க்கையில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிரையன் லாரா கூறுகையில், சூர்யகுமார் யாதவ் தரமான வீரர். ரன் குவிப்பதை வைத்து வீரர்களை நான் பார்க்க மாட்டேன். அவர்களது ஆட்ட நுணுக்கம், நெருக்கடியான தருணத்தை கையாளும் விதம், எந்த நிலையில் விளையாடுகிறார் என்பதை வைத்து தான் பார்ப்பேன். சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அருமையான ஆட்டத்தை அளித்தார். ரோகித் சர்மா, குயின்டான் டி காக்குக்கு அடுத்தபடியாக அவர் நெருக்கடியான நிலையில் களம் இறங்குகிறார் என்று கூறினார்.

மேலும் அவர், தொடக்க ஆட்டக்காரர்களை தவிர்த்து விட்டு பார்த்தால் எந்தவொரு அணியிலும் 3-வது வீரராக களம் இறங்குபவர் தான் சிறந்த வீரராகவும், அதிக நம்பிக்கைக்குரிய வீரராகவும் இருப்பார். என்னை பொறுத்தமட்டில் அவர் மும்பை அணிக்கு அது போன்ற சிறந்த வீரராக தான் இருந்து இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடருக் கான இந்திய அணியை பார்க்கையில் அவர் அதில் இடம் பெற்று இருக்க வேண்டும். அவர் ஏன் தேர்வாகவில்லை என்பது எனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.