விராட் கோலி 110 சதவீதம் உத்வேகத்துடன் விளையாடுவார் - மார்கஸ் ஸ்டோய்னிஸ் நம்பிக்கை

ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. விராட் கோலி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய பின்னர் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுகிறார். அதன்பின் நாடு திரும்புகிறார்.

விராட் தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்தியா திரும்புகிறார். அவரது முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், விராட் கோலி ஏழு போட்டிகளில் விளையாடினாலும் 110 சதவீத உத்வேகத்துடன் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

விராட் கோலி குறித்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் கூறுகையில், விராட் கோலியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஒருவேளை அதிக உத்வேகத்துடன் விளையாடலாம். ஆனால், 110 சதவீதம் உத்வேகத்திற்கு மேல் தேவை என்று நான் நினைக்கவில்லை. அதை பார்க்கலாம் என்று கூறினார்.

மேலும் அவர், விராட் போட்டிக்கு தயாராக இருப்பார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். முதல் குழந்தை பிறப்பிற்காக சொந்த நாடு திரும்புகிறார். என்னுடைய பார்வையில் அது சரியான முடிவு. ஆகவே. அவர் கூடுதல் உத்வேகத்துடன் இருப்பார் என்று தெரிவித்தார்.