காலங்காலமாக சுற்றுலாப்பயணிகளை வசீகரிக்கும் மணாலி!

ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தலம் மணாலி. 'தேவர்கள் வசிக்கும் பூமி' எனப்படும் குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி மாநிலத்தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது. மனம் மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமுடீய மலைச்சிகரங்கள் மற்றும் சிவப்பு-பச்சை ஆப்பிள் தோட்டங்கள் போன்ற உன்னதமான அழகம்சங்களின் மூலம் இந்த மணாலி காலங்காலமாக சுற்றுலாப்பயணிகளை வசீகரித்து வருகிறது.

இங்கு வரு சுற்றுலா பயணிகள் கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க், ஹடிம்பா கோயில், சோலங் வாலி எனும் பள்ளத்தாக்கு, ரோஹ்தங் பாஸ் மற்றும் பியாஸ் குண்ட் எனும் சிறு ஏரி போன்ற இடங்களை தவறாமல் பார்ப்பது அவசியம். பண்டோஹ் அணை, சந்திரகானி பாஸ், ரகுநாத் கோயில் மற்றும் ஜகந்நாதி தேவி கோயில் ஆகியவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

மணாலியில் உள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமான சோலங் பள்ளத்தாக்கு இங்குள்ள 300 மீ உயரம் கொண்ட 'ஸ்கி' (பனிச்சறுக்கு) மின் தூக்கி வசதியை கொண்டுள்ளது. இங்கு வருடாந்திரமாக நடத்தப்படும் குளிர்கால பனிச்சறுக்கு (ஸ்கி) திருவிழாவின் போது ஏராளமான சுற்றுலா ரசிகர்கள் இங்கு வருகை தருகின்றனர். ரோஹ்தங் பாஸ் எனப்படும் உயரமான மலையேற்றப்பாதை இப்பகுதியில் முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக பயணிகள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறது.

வாகனம் (ஜீப்) செல்லக்கூடிய உயரமான மலைச்சாலையாக அறியப்படும் இந்த மலைப்பாதை சாகசப்பொழுதுபோக்கு பிரியர்கள் பாராகிளைடிங் (பாராசூட் பறப்பு), மவுண்டெய்ன் பைக்கிங் மற்றும் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு உதவியாக உள்ளது. இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடாவிட்டாலும் இந்த மலைப்பாதை ஸ்தலத்திலிருந்து மயிர்க்கூச்செரிய வைக்கும் எழில் காட்சிகளையும், பனிச்சிகரங்களையும், மலைகளையும் பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மணாலியில் பியாஸ் குண்ட் எனும் ஸ்தலத்திற்கும் பயணிகள் செல்லலாம். மணாலியில் உள்ள வஷிஷ்ட் எனும் கிராமம் மணற்பாறைகளால் அமைக்கப்பட்டுள்ள கோயில்களுக்கும் இயற்கை நீரூற்றுகளுக்கும் புகழ் பெற்றுள்ளது. காட்டுயிர் அம்சங்களை பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் தவறாது 'கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் எனப்படும் தேசியப்பூங்காவிற்கு விஜயம் செய்யலாம். இங்கு பல பறவையினங்களும் வெஸ்ட்டர்ன் டிராகோபான் எனும் காட்டுக்கோழியும் இந்த பூங்காவில் வசிக்கின்றன. 30 வகையான பாலூட்டி விலங்குகள் மற்றும் 300 வகையான பறவைகள் இந்த பூங்காவில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.

சாகச துணிகர பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டுகளை விரும்புவோர்க்கு உகந்த சுற்றுலாத்தலமாகவும் மணாலி புகழ் பெற்றுள்ளது. சிகரமேற்றம், மலைப்பாதை சைக்கிள் சவாரி, ஆற்றுப்படகுச்சவாரி, மலையேற்றம், ஜார்பிங் எனப்படும் சுவாரசியமான கண்ணாடி உருண்டை சவாரி மற்றும் பாராகிளைடிங் போன்ற பல்விதமான சாகசப்பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.

மணாலி சுற்றுலாத்தலத்துக்கு பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். மணாலிக்கு அருகில் 50 கி.மீ தூரத்தில் புந்தர் விமான நிலையம் அல்லது குலு-மணாலி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து டெல்லி, சிம்லா, சண்டிகர், பதான்கோட் மற்றும் தரம்சாலா போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து மணாலிக்கு வரும் பயணிகளுக்கு வசதியாக அருகில் டெல்லி சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது.

மணாலி சுற்றுலாத்தலத்துக்கு அருகில் 165 கி.மீ தூரத்தில் ஜோகீந்தர் நகர் ரயில் நிலையம் உள்ளது. இது சண்டிகர் வழியாக மற்ற நகரங்களுடன் ரயில் இணைப்பு வசதிகளை அளிக்கிறது. இது தவிர ஹிமாசல் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகம் (HPTDC), மணாலியிலிருந்து சண்டிகர், சிம்லா, டெல்லி மற்றும் பதான்கோட் போன்ற நகரங்களுக்கு சொகுசுப்பேருந்துகளை இயக்குகிறது.

மணாலி சுற்றுலாத்தலத்தில் வருடமுழுதுமே இதமான இனிமையான பருவநிலை நிலவுகிறது. இருப்பினும் இந்தியாவிலேயே பிரசித்தமான இந்த மலைவாசஸ்தலத்துக்கு பயணம் மேற்கொள்ள மார்ச் முதல் ஜூன் வரையான பருவம் மிகவும் உகந்ததாக உள்ளது.