மகாராஷ்டிர ஆளுநர் பதவியிலிருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு
By: Nagaraj Mon, 23 Jan 2023 10:20:08 PM
மகாராஷ்டிரா: வேண்டாம் ஆளுநர் பதவி... மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக 80 வயதான பகத் சிங் கோஷ்யாரி உள்ளார்.
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்துடன் நல்லுறவை பேணி வருகிறார்.
80 வயதான மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஆளுநர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மும்பை வந்தபோது இது தொடர்பாக விருப்பம் தெரிவித்ததாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தெரிவித்தார்.
இதுகுறித்து மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா போன்ற ஒரு சிறந்த மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றுவது எனது மரியாதை மற்றும் பாக்கியம்.
இது புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம் மிக்க வீரர்களின் பூமி. கடந்த 3 ஆண்டுகளாக மகாராஷ்டிர மக்களிடம் இருந்து நான் பெற்ற அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் மும்பை பயணத்தின் போது, அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு, எனது வாழ்நாள் முழுவதையும் வாசிப்பு, எழுத்து மற்றும் பிற செயல்பாடுகளில் கழிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன்.
நான் எப்போதும் பிரதமரிடமிருந்து அன்பைத் தவிர வேறு எதையும் பெற்றதில்லை. இந்த விஷயத்திலும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.