ஆவின் பால் விநியோகத்தில் தாமதம்... இரண்டு நாட்களாக மக்கள் அவதி
By: Nagaraj Fri, 02 Sept 2022 10:48:56 AM
வேலூர்: ஆவின் விநியோகத்தில் தாமதம்... வேலூரில் தொடர்ந்து 2-வது நாளாக ஆவின் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஆவின் பால் பண்ணை சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக சுமாா் 650-க்கும் மேற்பட்ட முகவா்கள் உள்ளனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அனுப்ப வேண்டிய பால் பாக்கெட்டுகள் காலை 9 மணி வரை பல பகுதிகளுக்கு அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் முகவா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.
இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் வேலூரில் ஆவின் பால்
விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பால் முகவர்களுக்கு இன்னும் முழுமையாக
பால் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பால்
முகவர்களும் மக்களும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
ஆவின் பால் பேக்கிங் செய்வதற்கு ஆள்கள் பற்றாக்குறை காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.