Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணிக்காக, தென்மாவட்ட ரெயில் போக்குவரத்தில் வருகிற 15-ந் தேதி வரை மாற்றம்

பராமரிப்பு பணிக்காக, தென்மாவட்ட ரெயில் போக்குவரத்தில் வருகிற 15-ந் தேதி வரை மாற்றம்

By: vaithegi Fri, 02 Sept 2022 09:46:37 AM

பராமரிப்பு பணிக்காக, தென்மாவட்ட ரெயில் போக்குவரத்தில் வருகிற 15-ந் தேதி வரை மாற்றம்

மதுரை: மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட மானாமதுரை - மேல கொன்னக்குளம், திண்டுக்கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்கரன்கோவில் மற்றும் சூடியூர் - பரமக்குடி ரெயில்பாதையில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இதற்காக அந்த பாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதன்படி, ராமேசுவரம் - மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06652) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர பிற நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து பகல் 11 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும்.

இதைத்தொடர்ந்து மறுமார்க்கத்தில் மதுரை - ராமேசுவரம் ரெயில் (வ.எண்.06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.10 மணிக்கு புறப்படும். திருச்சி - மானாமதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06829/06830) இரு மார்க்கங்களிலும் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர பிற நாட்களில் சிவகங்கை - மானாமதுரை இடையே மட்டும் ரத்து செய்யப்படும். கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16322) இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சுமார் 1½ மணி நேரம் காலதாமதமாக இயக்கப்படும்.

south district rail,conversion,maintenance work ,தென்மாவட்ட ரெயில் ,மாற்றம் ,பராமரிப்பு பணி

அதே போன்று, சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சுமார் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் சுமார் 1½ மணி நேரம் கால தாமதமாகவும் இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இணைப்பு ரெயில் (வ.எண்.06672) சேவை இருக்காது.

அதே நேரத்தில் இணைப்பு ரெயிலாக இல்லாமல், இந்த ரெயில் மணியாச்சி-தூத்துக்குடி இடையே மட்டும் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும். அதேபோல, மதுரையில் இருந்து பகல் 11.30 மணிக்கு செங்கோட்டைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06663), செங்கோட்டையில் இருந்து பகல் 11.50 மணிக்கு மதுரை புறப்படும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06664) ஆகியன இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16731 மற்றும் 16732) விருதுநகரில் நடக்கும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக வருகிற 14,15-ந் தேதிகளில் இரு மார்க்கங்களிலும் திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரெயில்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :