அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி
By: Nagaraj Thu, 15 Sept 2022 5:57:27 PM
சென்னை: அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார்... மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள், தமிழக அரசு சார்பிலும் திமுக, அதிமுகவினர் சார்பிலும் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை இன்று தொடங்கிவைக்கிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கீழ் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும், தொண்டர்களும், அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணா பிறந்தநாளையொட்டி எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் சமூகநீதி,மாநில உரிமை,மொழி உரிமை போன்றவற்றை போராடி வென்றெடுத்து,எங்கும் எதிலும் தமிழை நிலைநாட்டி,எளிய தோற்றத்தால், பேச்சு ஆற்றலால் மக்கள் மனங்களை வென்று,நம் கழகத்தின் முதல் பெயரும்,முன்னோடியுமான பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்தநாளில் அவரின் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.