Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட இன்று முதல் அனுமதி

மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட இன்று முதல் அனுமதி

By: Monisha Mon, 14 Dec 2020 11:13:30 AM

மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட இன்று முதல் அனுமதி

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி முதல் எட்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களை வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

mamallapuram,temple,heritage site,tourism,permission ,மாமல்லபுரம்,கோவில்,புராதன சின்னம்,சுற்றுலா,அனுமதி

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் புராதன சின்னங்களை பார்வையிட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை பார்வையிட முடியும். இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை பார்வையிட அனுமதி இல்லை. மேலும், பார்வையாளர் கட்டண கவுண்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறமுடியாது என்றும், ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி செல்போனில் பதிவாகியுள்ள நுழைவு சீட்டை காண்பித்து உள்ளே செல்ல முடியும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

புராதன சின்னங்கள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் அவற்றை தூய்மைப்படுத்தும் பணி தொல்லியல் துறை பணியாளர்கள் மூலம் நடைபெற்றது. எட்டு மாதங்களாக மூடப்பட்ட புராதன சின்னங்கள் இன்று திறக்கப்பட உள்ளதால் சுற்றுலாவை நம்பி உள்ள வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், விடுதி உரிமையாளர்கள், வாடகை ஆட்டோ ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|