ஞாயிற்றுக்கிழமை நாளில் முழு ஊரடங்கு அடுத்த 2 மாதங்களுக்கு நீட்டிப்பு - கர்நாடக அரசு
By: Monisha Tue, 26 May 2020 12:11:37 PM

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கடந்த மார்ச் 25-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு தற்போது வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய ஊரடங்கில் பெருமளவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் பஸ் உள்பட அனைத்து வகையான போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான தொழில் நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வணிக வளாகங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.

மேலும் வருகிற 31-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதன்படி முதல்முறையாக மே 24-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வாகன ஓட்டமோ அல்லது மக்களின் நடமாட்டமோ இருக்கவில்லை. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
முழு ஊரடங்கிற்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பை கண்டு அரசு திருப்தி அடைந்துள்ளது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கை அடுத்த 2 மாதங்களுக்கு நீட்டிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாளில் மக்கள் அதிகளவில் வெளியில் வருவது வழக்கம். அதனால் முழு ஊரடங்கை நீட்டிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.








