கவர்னர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணிக்க முதல்வர் முடிவு
By: Nagaraj Mon, 14 Aug 2023 7:38:25 PM
சென்னை: கவர்னர் மாளிகையில் நாளை நடக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் பேசும் ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசுகிறார்.
ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் நிலையைப் புரிந்துகொள்ள ஆளுநர் ரவி மறுக்கிறார். ஆளுனர் ரவி பல சட்ட முன்மொழிவுகளை அனுமதிக்காமல் பல்கலைக்கழகங்களை சீர்குலைத்து உயர்கல்வித் துறையை சீர்குலைத்து வருகிறார்.
நீட் தேர்வு மரணங்கள் எழுப்பிய தார்மீகக் கேள்விகள் நம் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. ஆளுநரின் நடவடிக்கை தமிழக கல்வித்துறைக்கு எதிரான சதியாகவே பார்க்கிறோம். பேரவையில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழகத்தின் மாணவர்கள், பெற்றோர்கள், அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வகையில் பேசும் ஆளுநரை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதன் அடையாளமாக, சுதந்திர தினத்தையொட்டி, கவர்னர் மாளிகையில் நாளை நடக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.