மத வழிபாட்டு தலங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்படும்; ஜாலிய சேனாரட்ண தகவல்
By: Nagaraj Wed, 08 July 2020 1:38:45 PM
அதிக பாதுகாப்பு வழங்கப்படும்... நாடு முழுவதுமுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், பௌத்த, இந்து ஆலயங்களுக்கு தொடர்ந்தும் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கையை தொடர்ந்தே, தொடர்ந்தும் வழிபாட்டுத்தலங்களுக்கு உயர் பாதுகாப்பை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத்தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட புலனாய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகளவு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகள் முடியும் வரை படையினர் பாதுகாப்பு வழங்கியதை
அவதானிக்க கூடியதாகவுள்ளது. இது ஒரு விசேட நடவடிக்கை இல்லை என
தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர், புலனாய்வு பிரிவினர் விடுத்துள்ள விசேட
எச்சரிக்கையை தொடர்ந்தே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான பாதுகாப்பை
அதிகரிக்குமாறு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,
பொலிஸ் பேச்சாளர் அனைத்து பொலிஸ் நிலையங்களையும் விசேட புலனாய்வு
நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளார்.