- வீடு›
- செய்திகள்›
- ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனையில் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை
‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனையில் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை
By: Karunakaran Sat, 24 Oct 2020 4:39:11 PM
இந்தியாவில் முதன்முதலில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தார், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கிற முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிந்து விட்டன. இந்த சோதனைகளில் தடுப்பூசியினால் பெரிதான பக்க விளைவுகள் ஏதுமில்லை, பாதுகாப்பானது என தெரியவந்தது.
‘கோவேக்சின்’ தடுப்பூசியின் முதல் இரு கட்ட மருத்துவ பரிசோதனையின் இடைக்கால பகுப்பாய்வு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்நிலையில் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் பாரத் பயோடெக் கடந்த 2-ந்தேதி விண்ணப்பித்தது. அதை பரிசீலித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் 25 மையங்களில், ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. இதில் 26 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. இதற்கான ஒப்புதலை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ.) வழங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த சில நாட்களில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 3-வது மற்றும் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்தாலும், கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.