பேப்பர் தடுப்பாட்டினால் மாணவர்களுக்கு புத்தகம் விநியோகிக்க முடியாத நிலை
By: Nagaraj Sat, 25 June 2022 10:26:46 AM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பேப்பர் தட்டுப்பாட்டினால் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டுள்ளதால், அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக்கும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் எரிபொருள் தட்டுப்பாட்டினால் கடும் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அங்கு கடும் மின்சார கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.
மேலும் சில வாரங்களுக்கு முன்பு பொருளாதார வீழ்ச்சியால், பல பொருட்களின் இறக்குமதி தடைப்பட்டது. இந்நிலையில், அந்த நாட்டில் டீ குடிக்கும் பழக்கம் அதிகம் என்பதால் தேயிலை இறக்குமதியில் உலகின் முதல் நாடாக திகழ்ந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் பொதுமக்களை டீ குடிப்பதை குறைத்துக் கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியது.
பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே
வருகிறது, மேலும் அந்த நாடு திருப்பி செலுத்த வேண்டிய கடனும் அதிகரித்து
கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பணவீக்கம் மற்றும் பொருளாதார வீழ்ச்சியால்
அங்கு பேப்பர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு
தற்போது காகிதத்தின் விலை உயர்ந்து கொண்டே போவதால் புத்தகங்களின் விலை
நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்க
உள்ள நிலையில் பேப்பர் தட்டுப்பாட்டினால் மாணவர்களுக்கு புத்தகங்கள்
விநியோகம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து அந்த
நாட்டு காகித உற்பத்தி அமைப்பு கூறுகையில், "தற்பொழுது நாட்டில் நிலவி
வரும் கடும் பொருளாதார நெருக்கடியினால் பேப்பர் தட்டுப்பாடு நிலவி
வருகிறது. இதனால் இந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள்
விநியோகம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்." என்று தெரிவித்தது.