தென்மேற்கு பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்
By: Nagaraj Tue, 28 July 2020 7:17:30 PM
மழையுடனான வானிலை அதிகரிக்கும்... நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று மாலையிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு, மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை
மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த
மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, கிழக்கு மற்றும்
வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல
இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ
பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை
பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்
வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை
குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு
பொதுமக்களுக்கு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
களுத்துறையிலிருந்து
காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்தை அண்மித்த
பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்மித்த
நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கரையோரப்
பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக
இருக்குமாறு அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.