திருடப்பட்ட வரதராஜ பெருமாள் கோயில் சிலைகள் மீட்பு... சாமியார் கைது
By: Nagaraj Mon, 29 May 2023 9:53:10 PM
சேலம்: கோயிலில் திருடப்பட்ட சிலைகள் மீட்பு... சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட 7 சுவாமி சிலைகளையும் பறிமுதல் செய்த போலீசார், சிலைகளை திருடிய சாமியாரை கைது செய்தனர்.
தாரமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 21-ம் தேதி பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி உள்ளிட்ட 7 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிலைகள் காணாமல்போனது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பெரிய சோரகை கிராமம் குள்ளானூர் பகுதியை சேர்ந்த சாமியார் சக்திவேலை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர் சிலைகளை திருடியது தெரியவந்ததையடுத்து, அவரது வீட்டில் மறைத்து வைக்கபட்டிருந்த 7 சுவாமி சிலைகளையும் கைப்பற்றினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுவாமி சிலைகளை திருடி கோவில் கட்டி பூஜை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.