குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ 1000: அமைச்சர் தெரிவித்த மகிழ்ச்சி செய்தி
By: Nagaraj Wed, 15 June 2022 6:52:38 PM
மதுரை: குடும்ப தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குடும்பத்தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் இத்திட்டம் இன்னும் துவங்கப்படாததால்
எதிர்க்கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என
பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல்
தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000
ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று
வருகிறது. நகை கடன் தள்ளுபடி போன்று தகுதியுடைய நபர்களுக்கு ஊக்கத்தொகை
வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம். எவ்வளவு விரைவில் ஊக்கத்தொகை
வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர்
கூறினார்