தமிழ் விரோத போக்கை கடைபிடித்தால் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் - சீமான் எச்சரிக்கை
By: Karunakaran Sun, 15 Nov 2020 12:53:29 PM
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பதற்குக்கடும் விதிகளை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் அவர், ஒரு வகுப்பிலுள்ள 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் கற்பிக்கப்படும் எனவும், அதுவும் பகுதிநேர ஆசிரியர்தான் நியமிக்கப்படுவார் எனவும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் எனவும் தமிழ் கற்பதற்கு பல தடைகளைக் கொண்டு வந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ் மீதும், தமிழர் மீதும் கொண்டுள்ள விரோதப்போக்கை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக கூறினார்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடம் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்க விருப்பமா? என்ற கேள்வியைத் திட்டமிட்டு திணிக்கும் மத்திய அரசு, தமிழைக் கற்பிக்க மட்டும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கோருவது எவ்வகையில் நியாயமாகும்? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் 6 ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை கட்டாயப் பாடமாகவும், 9 -ஆம்வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை விருப்ப பாடமாகவும் உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்..
மேலும் அவர், மேடைக்கு மேடை திருக்குறளையும், தமிழின் பெருமையும் பிரதமர் மோடி பேசுவதெல்லாம் தமிழர்களை ஏமாற்ற நடத்தும் நாடகம் என்பதையே உணர்த்துகிறது. தமிழர்களின் பிறப்புரிமையான தாய் மொழிக் கல்வியைப் பெறுவதில் தடையை ஏற்படுத்தும் விதிகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பபெற வேண்டும். இல்லையெனில், தமிழகத்தில் மீண்டும் மொழிப் போர் வெடிக்குமென எச்சரிக்கிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.