போலி தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை... தேர்வாணையம் எச்சரிக்கை
By: Nagaraj Fri, 25 Nov 2022 11:06:14 PM
சென்னை: போலி தகவல்களை நம்பாதீர்கள்... பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஸ்சி சார்பில் நடத்தப்பட்ட பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் உலவும் போலியான பட்டியலை யாரும் நம்பவேண்டாம் என்று டிஎன்பிஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 02.07.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் (Fake List) சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தெரியவருகிறது.
இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாணையம்
கேட்டுக்கொள்கிறது. தேர்வாணையத்தின் அனைத்து தேர்வு முடிவுகளும் தேர்வாணைய
இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதனை www.tnpsc.gov.in என்ற
தேர்வாணைய இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளுமாறும் தெரிவித்துக்
கொள்ளப்படுகிறது.
இது போன்ற பொய்யான தகவல்களை
பரப்புபவர்களின் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.