அரியானாவில் மனைவியை டாய்லெட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக அடைத்து வைத்த கணவன்
By: Karunakaran Thu, 15 Oct 2020 1:54:08 PM
அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணை அவரது கணவன் டாய்லெட்டில் அடைத்து வைத்துள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நரேஷ் என்பவர் தன் மனைவியை ஒரு வருடத்திற்கும் மேலாக டாய்லெட்டுக்குள் வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர், அந்த பெண்ணை அதிகாரிகள் மீட்டனர். மிகவும் அலங்கோலமாக, அழுக்கு படிந்த நிலையில் இருந்த அந்தப் பெண்ணை குளிப்பாட்டினர். பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, நரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன் மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெளியில் எங்கும் உட்கார மறுத்து டாய்லெட்டில் சென்று அமர்ந்திருந்ததாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது மனநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறினார். ஆனால், அந்த பெண்ணிடம் பேசிய வகையில் அவருக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாக தோன்றவில்லை என அந்த பெண்ணை மீட்ட அதிகாரி ரஜினி குப்தா தெரிவித்துள்ளார்.