சீரற்ற காலநிலை சில நாட்களுக்கு தொடரும்; வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்
By: Nagaraj Sun, 13 Sept 2020 11:21:21 AM
இன்னும் சில நாட்களுக்கு தொடரும்... இலங்கையில் தற்போது தொடர்ந்துவரும் சீரற்ற கால நிலை, எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த
காற்றும் வீசக்கூடும் என்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய
பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,
ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின்
வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை
அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
புத்தளத்தில்
இருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையில் இருந்து
பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்
காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு
கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும்
காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5- 3.0
மீட்டர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே,
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக
இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.