நாயை உடன் அழைத்து செல்பவர்களுக்கு கொரோனா ஆபத்து அதிக அளவில் உள்ளதாக ஆய்வில் தகவல்
By: Karunakaran Tue, 17 Nov 2020 8:28:51 PM
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவத்தொடங்கியது. அதன்பின் சிங்கம், கீரி உள்பட பல்வேறு விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா சுலபமாக பரவலாம் என்ற அச்சம் நிலவியுள்ளது. இந்நிலையில், செல்லப்பிராணிகளில் முதன்மையான நாய் மூலமும் கொரோனா வைரஸ் பரவும் என்ற அதிர்ச்சியளிக்கக்கூடிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
செல்லப்பிராணியான நாயை நடைபயணத்தின் போது அழைத்துசெல்லும் அதன் உரிமையாளர்களுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது என தெரியவந்துள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், நடைபயணத்தின் போது செல்லப்பிராணியான நாயை அழைத்து செல்லும் அதன் உரிமையாளர்களுக்கு கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் 78 சதவீதம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணியான நாயை பொதுவெளிக்கு அழைத்து செல்லும்போது அழுக்கான இடங்களில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நாயின் மேற்பரப்பில் தொற்றிக்கொள்கிறது. நாயை அதன் உரிமையாளர்கள் தொடும்போது அதில் பரவியுள்ள வைரஸ் மனிதர்களுக்கும் பரவி விடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் மார்க்கெட் சென்று பொருட்களை வாங்குபவர்களை காட்டிலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தே பொருட்களை பெற்றுக்கொள்பவர்களுக்கு 94 சதவீதம் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை காட்டிலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு 76 சதவீதம் கொரோனா பரவுவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.