- வீடு›
- செய்திகள்›
- காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் வனவிலங்குகள் இறந்த சம்பவத்திற்கு வில்லியம்ஸ் தம்பதி வேதனை
காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளத்தில் வனவிலங்குகள் இறந்த சம்பவத்திற்கு வில்லியம்ஸ் தம்பதி வேதனை
By: Nagaraj Sat, 25 July 2020 11:23:13 AM
அசாம் வெள்ளம் மற்றும் காசிரங்கா தேசிய பூங்காவில் வனவிலங்குகள் இறந்த சம்பவத்திற்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அங்குள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவத்துக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் பருவமழை காரணமாக வட கிழக்கு மாநிலமான அசாமில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சுமார் 26 மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு நிலச்சரிவு காரணமாக சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுவரை கனமழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த மழை வெள்ளத்தால் ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களுக்குப்
புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இங்கு
சுமார் 93% நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளதோடு 12 காண்டாமிருகங்கள்,
40க்கும் மேற்பட்ட வராக மான் உட்பட 120க்கும் அதிகமான விலங்குகள்
உயிரிழந்துள்ளன.
இந்நிலையில் காசிரங்கா தேசிய பூங்காவில் விலங்குகள்
உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் மற்றும்
அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக
காசிரங்கா தேசிய பூங்காவிற்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், நாங்கள் 2016
ஆம் ஆண்டு காசிரங்காவுக்கு வருகை தந்தபோது எங்களுக்கு மகிழ்ச்சியான
அனுபவங்கள் கிடைத்தது.
ஆனால் தற்போது உள்ள நிலைமையை நினைத்தால்
அதிர்ச்சியாக உள்ளது. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உட்பட பல விலங்குகள்
உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது. முன்னதாக நாங்கள் காசிரங்காவுக்கு
வருகை தந்திருப்பதால் அனைத்து ஊழியர்களும் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை
பராமரிப்பதில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத்
தெரியும்,
ஆனால் இந்த கடினமான நேரத்தை தற்போது கற்பனை செய்து
பார்க்க இயலவில்லை என தெரிவித்துள்ளனர். உங்கள் சொந்த பாதுகாப்பு
அபாயத்தையும் மீறி, விலங்குகளை மீட்கவும், சேதத்தை குறைக்கவும் நீங்கள்
செய்து வரும் அனைத்து வேலைகளையும் கேத்தரினும், நானும் பெரிதும்
பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனாவுக்கு
மத்தியில் அசாமில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள இழப்புகள் ஆழ்ந்த
வருத்தத்தை அளிக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.