Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தாண்டு கொண்டாட்டம் ... இன்று இங்கு போக்குவரத்து மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டம் ... இன்று இங்கு போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Sat, 31 Dec 2022 10:52:27 AM

புத்தாண்டு கொண்டாட்டம்   ...  இன்று இங்கு போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையில் மெரினா உள்பட கடற்கரை பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்பது வழக்கம். எனவே இன்று இரவு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இன்று புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள். எனவே, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையானது, 'உயிரிழப்பு இல்லா புத்தாண்டுக்கு முன்னாள்' என்ற நோக்கத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் வருமாறு:

அதன்படி கடற்கரை உட்புற சாலை 31-ந்தேதி இரவு 7 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புற சாலையில் இந்த நேரத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும். காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31-ந்தேதி இரவு 8 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும். அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் காரணீஸ்வரர் பகோடா தெருவில் அம்பேத்கர் பாலம் வழியாக நடேசன் சாலை, ஆர்.கே.சாலை வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம். டாக்டர் ஆர்.கே.சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, மந்ைதவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கிரீன்வேஸ் சாலையை சென்றடையலாம்.

change of traffic,new year , போக்குவரத்து மாற்றம் ,புத்தாண்டு

இதனை அடுத்து அடையாரில் இருந்து பாரிமுனை நோக்கி செல்லும் மாநகர பஸ்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தைவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை, கதீட்ரல் ரோடு அண்ணாசலை வழியாக உங்கள் இலக்கை சென்றடையலாம். பாரிமுனையில் இருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து மாநகர பஸ்களும் ஆர்.பி.சுரங்கப்பாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு என்.எப்.எஸ் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம், கதீட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தைவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலையை சென்றடைந்து உங்கள் இலக்கை சென்றடையலாம். அனைத்து மேம்பாலங்களும் 31-ந்தேதி இரவு 10 மணி முதல் 1-ந்தேதி காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். எலியட்ஸ் கடற்கரை பகுதியில் 31-ந்தேதி அன்று இரவு 8 மணிக்கு பின்னர் 6-வது அவென்யூ நோக்கி 1-ந்தேதி அன்று 6 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

மேலும் 6-வது அவென்யூ, 5-வது அவென்யூ சந்திப்பு, 4-வது மெயின் ரோடு சந்திப்பு, 3-வது மெயின் ரோடு சந்திப்பு, 16-வது குறுக்கு தெரு சந்திப்பு மற்றும் 7-வது அவென்யூ எம்.ஜி. ரோடு சந்திப்பில் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி தடை செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :