Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் நிறைவு

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் நிறைவு

By: Monisha Thu, 24 Dec 2020 11:16:49 AM

வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் நிறைவு

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதனை கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

இதில், சுரங்கப்பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு ரயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களும் வர உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜூன் மாதம் ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன.

traffic congestion,metro rail,expansion work,chipping,completion ,போக்குவரத்து நெரிசல்,மெட்ரோ ரயில்,விரிவாக்கப்பணிகள்,தொய்வு,நிறைவு

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவாக்கப்பாதையில் ரயில் பாதை அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்து விட்டது. இன்று முதல் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. ரயில் ஓடும் போது தண்டவாளம் அருகில் உள்ள கட்டுமானங்களில் ரயில் மோதாமல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து இன்று டிராலியில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம்.

வருகிற 25-ம் தேதி டீசல் என்ஜினை இயக்கி தண்டவாளத்தின் உறுதி தன்மை சோதனை செய்யப்பட உள்ளது. 26-ம் தேதி மெட்ரோ ரயிலை இந்தப்பாதையில் வேகமாக இயக்கி சோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து 27-ம் தேதி ரயிலில் உள்ள கருவிகளை முறையாக தண்டவாளம் அருகில் உள்ள சிக்னல்களுக்கு ஏற்ப இயக்க முடிகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பின்னர், ஜனவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் பாதுகாப்பு ஆணையரின் சோதனை நடக்கும். ஜனவரி இறுதியில் ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறினார்கள்.

Tags :