அமெரிக்காவில் இருந்து வந்த கணவரை வீட்டிற்குள் ஏற்காத மனைவியால் பரபரப்பு
By: Monisha Wed, 19 Aug 2020 10:29:32 AM
ஆசைஆசையாக மனைவியையும் குழந்தையையும் பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்த கணவரை வீதியில் நிறுத்திய மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தார். அவர் சமீபத்தில் தாய் நாட்டுக்கு செல்ல அனுமதி கிடைத்ததை அடுத்து நேற்று தனது சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தன்னைப் பார்த்ததும் தனது மனைவியும் குழந்தைகளும் ஓடிவந்து கட்டி அணைப்பார்கள் என்ற கனவுடன் வந்த பாஸ்கரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பலமுறை தட்டியும் அவரது மனைவி வீட்டின் கதவை கூட திறக்கவில்லை. கொரோனா காலத்தில் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று அவரிடம் கூறி இருந்ததை அடுத்து கணவராக இருந்தாலும் கதவை திறக்க முடியாது என்று அவரது மனைவி பிடிவாதமாக இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கதவை திறக்க விட்டாலும் பரவாயில்லை, காரின் சாவியை கொடு, நான் காரை எடுத்துக்கொண்டு மதுரைக்கு சென்று விடுகிறேன் என்று பாஸ்கரன் கெஞ்சியுள்ளார். ஆனால் அதற்கும் அந்தப் பெண் செவிசாய்க்கவில்லை. இதனை அடுத்து பரிதாபப்பட்ட பக்கத்து வீட்டினர் அவருடைய மனைவிக்கு செல்போன் மூலம் அறிவுரை கூறினார். ஏற்கனவே அவர் கொரோனா பரிசோதனை முடித்து நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் தான் வீட்டிற்கு வந்துள்ளார். எனவே கதவை திறந்து உள்ளே அழைத்துக் கொள். எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கூறினார்கள். ஆனால் யாருடைய அறிவுரையும் அந்தப் பெண் கேட்கவில்லை. கதவையும் திறக்கவில்லை.
இதனை அடுத்து கடுப்பான பாஸ்கர் வீட்டின் கேட் கதவை உடைத்து காரை எடுத்துக்கொண்டு மதுரைக்குச் சென்று விட்டார். கொரோனா பயத்தால் கட்டிய கணவனையே வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மனைவியால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.