பேஸ்புக் காதல்: இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர் கைது
By: Monisha Tue, 29 Dec 2020 11:56:47 AM
கோவை காந்திநகர் பகுதியை சேர்ந்த அனுஷியா(வயது 28), திருமணமாகி கணவரை விவாகரத்து செய்தவர். இவருக்கு பேஸ்புக் மூலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு கோவையில் ஒன்றாக வசித்து வந்தனர். அனுஷியா கடன் வாங்கி கணவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார்.
இந்நிலையில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து மாரிசெல்வம், பேஸ்புக் மூலம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி(30) என்ற மற்றொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். திடீரென ஒருநாள் அவர் சிவகாசி செல்வதாக கூறி மனைவி அனுஷியாவிடம் பொய் சொல்லி மோட்டார்சைக்கிளில் வேதாரண்யம் வந்துள்ளார். அங்கு மாலதியை அவர் 2-வதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் அங்கேயே தங்கிவிட்டார்.
இந்நிலையில், கணவரின் வாட்ஸ்-அப் முகப்பு படத்தில்(புரொபைல் பிக்சர்) அவர் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் இருந்தை அனுஷியா பார்த்தார். இதுகுறித்து அனுஷியா விசாரித்தபோது மாரிசெல்வத்துக்கும், மாலதிக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அனுஷியா, தனது பெற்றோருடன் வேதாரண்யம் சென்று மாரிசெல்வத்தை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது அவர், அனுஷியாவை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அனுஷியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அனுஷியா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.