கொரோனா பரவல் காரணமாக தசரா விழாவை எளிமையாக கொண்டாட முடிவு

கொரானா பரவல் காரணமாக இந்தாண்டு தசரா விழாவை எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூருவில் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டினரும் லட்சக்கணக்கில் பங்கேற்பர். இந்த ஆண்டு தசரா விழா வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தற்போது மைசூரு, பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.

இதனால் இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக நடத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஜம்பு சவாரி (யானை) ஊர்வலம், பாரம்பரிய நிகழ்ச்சிகளை தவிர்த்து பிற நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது. மைசூரு நகர் முழுவதும் நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலம் அரண்மனை வளாகத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது

இதனிடையே, மைசூரு அரண்மனையின் மகாராணி பிரமோத தேவி செய்தியாளர்களிடம் கூறும்போது, வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு மைசூரு அரண்மனையில் நடக்கும் தசரா சம்பிரதாய சடங்குகளை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அர்ச்சகர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மைசூரு மாநகராட்சியின் கொரோனா தடுப்பு பணிக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.