சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு அனுமதி

சென்னை:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்தக் கோயிலில் பிரதோ‌ஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதனை அடுத்து அதன்படி அந்த நாட்களில் மட்டுமே பக்தர்களும் மலையேறவும், கோவிலில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அந்தவகையில், பிரதோஷம் மற்றும் சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

எனவே அதன்படி மே 3 - புதன் கிழமை முதல் 6-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி , சுந்தர மகாலிங்கரை தரிசிக்கலாம். அதேநேரம் 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது என்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்படுவதாகவும், இரவில் கோயிலில் தங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.