திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி டிக்கெட் நாளை விற்பனை செய்யப்படுகிறது


திருவண்ணாமலை : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வருகிற நவம்பர் 26- ம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பரணி, மகா தீப தரிசனத்திற்கான டிக்கெட் நாளை (24.11.2023) முதல் விற்பனை செய்யப்படுகிறது. காலை 4 மணிக்கு நடைபெறும் பரணி தீபத்தைக் காண ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும்.

மாலை 6 மணிக்கு மகா தீபத்தைக் காண ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1,000 பேருக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.மேலும் அனுமதி சீட்டுகளை www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணையதளத்தில் நாளை காலை 10 மணி முதல் பெறலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.