திருப்பதியில் மழை ,குளிர் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி, சித்தூர், காளஹஸ்தி, ரேனிகுண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பலத்த மழை பெய்து கொண்டு வருகிறது. எனவே இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருமளவு தேங்கியது.

திருப்பதியில் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். வைகுந்தம் காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதுமாக பக்தர்கள் கூட்டம் நிரம்பியதால் நீண்ட தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதனை அடுத்து மழையில் நனைந்தபடி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் கடும் குளிர் வீசுவதால் பக்தர்கள் குளிரால் நடுங்குகின்றனர். குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து திருப்பதியில் நேற்று மட்டும் 68,128 பேர் தரிசனம் செய்தனர். 34,021 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.44 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது