இன்று சபரிமலையில் ஜோதி தரிசனம்... லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம்

திருவனந்தபுரம்: தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெற்றது.


சபரிமலை அய்யப்பன் கோவில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மகரவிளக்கு பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு இன்று மாலை 6.30 மணியளவில் பந்தள அரண்மனையில் இருந்து நகைப் பெட்டியில் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சபரிமலை பொன்னம்பல மலையில் சுவாமி அய்யப்பன் 3 முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டு மகர ஜோதி தரிசனம் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், மகர ஜோதி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. சன்னிதானத்தை சுற்றி சுமார் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.


மகர ஜோதியை காண சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அங்கும் இங்கும் கூடாரம் போட்டார்கள். பம்பை சன்னிதானத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 3000 போலீஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.