சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலைக்கு இன்று முதல் அடுத்தாண்டு வருகிற ஜன.16 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கடலூரிலிருந்து அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் இயக்கப்படுகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இந்த நிலையில்‌ போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னை, திருச்சி, மதுரை மற்றும்‌ புதுச்சேரி / கடலூர்‌ ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப்‌ பேருந்துகள்‌ மற்றும்‌ குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும்‌ படுக்கை வசதி உள்ள சிறப்புப்‌ பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன.

(சபரிமலை தேவஸ்தானம்‌ அறிவிப்பின்படி 27.12.2023 முதல்‌ 30.12.2023 மாலை 5.00 மணி வரை கோவில்‌ நடை சாத்தப்படுவதால்‌ 26.12.2023 முதல்‌ 29.12.2023 வரை இச்சிறப்புப்‌ பேருந்து இயக்கப்படமாட்டாது) இதையடுத்து இந்த வருடம்‌ பக்தர்கள்‌ கூடுதலாக பயணம்‌ செய்ய முன்வருவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில்‌ கொண்டு சென்னை மற்றும்‌ இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள்‌ இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில்‌ பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும்‌ குழுவாக செல்லும்‌ பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில்‌ பேருந்து வசதி செய்து தரப்படும்‌. மேலும்‌, 30 நாட்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப்‌ பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, WWW.TNSTC.IN மற்றும் TNSTC Official App போன்ற இணையத்தளங்களில்‌ முன்பதிவு செய்துகொள்ளும்‌ வசதியும்‌ ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும்‌, பேருந்துகளின்‌ விவரம்‌ உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445014424, 9445014463 மற்றும்‌ 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத்‌ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்‌” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.