இந்திய சந்தையில் வளர்ச்சியை பதிவு செய்த ஆப்பிள் நிறுவனம்!

புத்தாண்டு முதல் இந்திய சந்தையில் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் அசத்தல் திட்டங்களை தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆண்டு இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

ஐபோன் 11 மற்றும் ஐபோன் 12 மாடல்கள் அதிக பிரபலமாக இருந்ததோடு ஐபோன் XR போன்ற மாடல்களின் விலை குறைப்பு காரணமாக அதிகளவு விற்பனையாகியும் இருந்தது.

முன்னணி ஆய்வு நிறுவனமான இந்திய டேட்டா கார்ப்பரேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி அக்டோபர் மாதத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 51 ஆயிரம் விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை பலமடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு ஐபோன் XR மற்றும் ஐபோன் 11 மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பு மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் மாதத்தில் பிரீமியம் சந்தை 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் 50 இல் 49 நகரங்களில் முன்னிலை வகித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு ஐபோன் 11 மற்றும் 12 வெளியீடு, ஐபோன் எஸ்இ2 வெளியீடு மற்றும் கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன்களுக்கு அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு உள்ளிட்டவை முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

அந்த வகையில் 2021 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பிரியர்கள் மட்டுமின்றி மிட்-பிரீமியம் வாடிக்கையாளர்களை குறி வைத்து புது சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.