தங்கம் விலை சவரன் 38 ஆயிரத்தை நெருங்குகிறது

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பின்னர் தங்கம் விலை சில வாரங்களுக்கு முன்பு குறைந்தபடி இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தபடியே இருந்து வருகிறது.

கடந்த 3-ம் தேதி தங்கம் சவரன் விலை மீண்டும் ரூ.37 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று பவுன் விலை ரூ.37 ஆயிரத்து 664 ஆக இருந்தது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 808க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 726 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசு உயர்ந்து 71 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.