தனியார் நிறுவன பால் விலை உயர்வு... ஆவினுக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கடி

சென்னை: திடீர் நெருக்கடி... தனியார் பால் விலை உயர்வு காரணமாக, ஆவின் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக, மாநிலம் முழுதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சமீபத்தில், ஜி.எஸ்.டி., வரி உயர்வை காரணம் காட்டி, தயிர், நெய், மோர் விலையை 5 மற்றும் 12 சதவீதம் என, ஆவின் நிறுவனம் உயர்த்தியது.

இந்நிலையில், தனியார் நிறுவனங்கள், பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்தி உள்ளன. இதனால், ஆவின் நிறுவனத்தை தேடி நுகர்வோர்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். ஆனால், ஆவின் தரப்பில் கொள்முதலில் கவனம் செலுத்தாததால், தனியாரிடம் பாலை, விவசாயிகள் விற்று வருகின்றனர். இதனால், வரும் நாட்களில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், பால் பவுடர், வெண்ணெய், நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் உற்பத்தியும் பாதிக்கப்படும். எனவே, பால் கொள்முதல் குறைந்த மாவட்டங்களில், அதை அதிகரிக்க, பால் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு, பால் வளத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். உரிய கவனம் செலுத்தாத அதிகாரிகள் மீது சாட்டையை சுழற்றவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.