கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் சரிவு

மும்பை : ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து உள்ள நிலையில், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் காணப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி கொண்டு வருகின்றனர்.

எனவே தங்கள் வசமுள்ள பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரித்து உள்ளது. இதனால், பங்குச் சந்தையில் தொடர் சரிவு காணப்படுகிறது.நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 522 புள்ளிகள் குறைந்து 64,049 ஆக சரிந்தது.

இதனை அடுத்து நிஃப்டி 159 புள்ளிகள் குறைந்து 19,122 ஆக குறைந்து உள்ளது. சதவீத அடிப்படையில் சென்செக்ஸ் 0.81 சதவீதமும் நிஃப்டி 0.83 சதவீதமும் சரிந்தன.

மேலும் அதிகபட்சமாக இன்போசிஸ் 2.74% சரிவைக் கண்டது. அதானி எண்டர்பிரைசஸ் 2.24%, சிப்லா 2.23%, அப்பல்லோ ஹாஸ்பிட்டல் 2.21%, என்டிபிசி 1.90% என்ற அளவில் சரிவைக் கண்டன.

இருப்பினும், கோல் இந்தியா (1.37 %), டாடா ஸ்டீல் (1.13%), ஹிண்டால்கோ (0.99%) ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நேற்றைய வர்த்தக முடிவில் ஏற்றம் கண்டன.