நெட்மெட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த களமிறங்கியுள்ள ரிலையன்ஸ்

புதுடில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், இணையதள மருந்து வர்த்தக நிறுவனமான, ‘நெட்மெட்ஸ்’ நிறுவனத்தின், பெரும்பான்மை பங்குகளை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தெரிகிறது.

‘ஆன்லைன்’ மூலமாக, மருந்து விற்பனையில் ஈடுபட்டு வரும் நெட்மெட்ஸ், கடந்த, 2015ல் துவங்கப்பட்டது.‘ஆன்லைன்’ வர்த்தகத்தில் தீவிர முயற்சிகள் எடுத்து வரும் ரிலையன்ஸ், அதை விரிவுபடுத்தும் வகையில், நெட்மெட்ஸ் நிறுவனத்தையும் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

ஏற்கனவே மளிகை உள்ளிட்டவற்றை, ‘டெலிவரி’ செய்வதற்காக, நெட்மெட்ஸ் உடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்நிலையில், நெட்மெட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது, ரிலையன்ஸ்.

மருந்து துறையை பொறுத்தவரை, இது ரிலையன்ஸ் நிறுவனத்தின், இரண்டாவது முயற்சியாகும். இதற்கு முன், பெங்களூரைச் சேர்ந்த, ‘சி ஸ்கொயர் இன்போ சொலுயூசன்ஸ்’ நிறுவனத்தின், 82 சதவீத பங்குகளை வாங்கியது. இந்நிறுவனம், மருந்து துறையில் உள்ள வினியோகஸ்தர்கள், சில்லரை விற்பனையாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் ஆகியோருக்கான மென்பொருளை தயாரித்து வழங்கி வரும் நிறுவனமாகும்.