ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்தது

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த 10-ந்தேதி தங்கம் விலை ரூ.39 ஆயிரத்துக்குள் வந்தது. அன்று பவுன் ரூ.38 ஆயிரத்து 240-க்கு விற்றது. அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது.

இந்நிலையில் தங்கம் விலையில் இன்று குறைவு காணப்பட்டது. சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 568-க்கு விற்றது. இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38 ஆயிரத்து 408-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4801 ஆக உள்ளது.

அதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.68 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.10-க்கு விற்கிறது.