இந்திய சந்தையில் பவர் பேங்க் விற்பனையில் புதிய மைல்கல் எட்டிய சியோமி நிறுவனம்

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு கோடி எம்ஐ பவர் பேங்க் மாடல்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஒரு கோடி யூனிட்களும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை என சியோமி தெரிவித்துள்ளது.

சீன நிறுவனமான சியோமி 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பவர் பேங்க் மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்திய விற்பனை துவங்கிய மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்திருந்தது. தற்போது அதனை செய்து முடித்துள்ளது.

இதற்கு முன்னதாக, காம்பேக்ட் பவர் பேங்க் மாடலின் இந்திய வெளியீட்டை சியோமி அறிவித்தது. இந்நிலையில், தற்சமயம் புதிய மைல்கல் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு கோடி எம்ஐ பவர்பேங்க் விற்பனை விவரங்களை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சியோமி நிறுவனம் ஐந்து பவர் பேங்க் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் எம்ஐ பவர்பேங்க் 3ஐ 20,000 எம்ஏஹெச், எம்ஐ பவர்பேங்க் 3ஐ 10,000 எம்ஏஹெச், எம்ஐ வயர்லெஸ் பவர்பேங்க் 10,000 எம்ஏஹெச், ரெட்மி பவர் பேங்க் 20,000 எம்ஏஹெச் மற்றும் ரெட்மி பவர் பேங்க் 10,000 எம்ஏஹெச் உள்ளிட்டவை அடங்கும்.