விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்த தீபிகா படுகோன்

மும்பை: நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் விமானத்தில் ‘எகானமி’ வகுப்பில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தனது சமீபத்திய செயல்பாடுகள் மூலம் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை தீபிகா படுகோனே. காரணம் இவர் சமீபத்தில் விமானத்தில் ‘எகானமி’ வகுப்பில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பான விடியோ வைரலாக வெளிவந்துள்ளது.

அதில் அவர் சாதாரண பயணிகள் போலவே விமானத்தினுள் சென்று தனது இருக்கையில் அமர்கிறார். மேலும் ஆரஞ்சு வண்ணத்தில் எளிமையான ஆடையுடன், தலையில் ஆரஞ்சு வண்ண தொப்பியும் கறுப்பு கண்ணாடியும் அணிந்திருந்தார்.

விமானத்தில் அவரை பார்த்த ரசிகர் ஒருவர், “ஹாய் தீபிகா” என்று குரல் கொடுத்தார். ஆனால், அவர் அதை சட்டை செய்யவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த வீடியோவின் கீழே, “நடிகை தீபிகா படுகோனே, விமானத்தில் எகானமி வகுப்பில் பயணிக்கிறார். இதர நடிகர், நடிகைகளும் அப்படிச் செல்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அது சரி… விமானத்தில் நடிகர் ஒருவர் எகானமி வகுப்பில் பயணிப்பது ஒன்றும் இது முதன்முறையல்ல. ஏற்கெனவே காத்ரீனா கைஃப், விக்கி கெளஷல் உள்ளிட்டோர் எகானமி வகுப்பில் பயணம் செய்துள்ளனர். அவர்களின் விடியோவும் வைரல் ஆனது.

கார்திக் ஆர்யனும் விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்தது பரபரப்புச் செய்தியானது. அவர் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்தாலும் தீபிகா போல் உம்மணா மூஞ்சியாக உட்கார்ந்திருக்கவில்லை. சக பயணிகளான ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதுடன், தம்மை கவனித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.