அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைக்கும் பிரபல இயக்குனர்

சென்னை: அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை இயக்க உள்ளாராம் இயக்குனர் ஹரி என்று கோலிவுட்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழில் ஆக்ஷன் படங்களை எடுக்கும் பிரபல இயக்குநர்களில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஹரி. இவர் 2002ம் ஆண்டு, பிரசாந்த் நடித்த 'தமிழ்' திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார்.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சியான் விக்ரம் நடிப்பில் 'சாமி' படத்தை இயக்க, அப்படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 'அருள்', 'ஆறு', 'சிங்கம்', 'வேங்கை' என பல ஹிட் படங்களைக் கொடுத்து இருக்கிறார்.

இவரது படங்கள்னாலே வருடத்திற்கு ஒன்று அல்லது 2 வருடத்திற்கு ஒன்று என வெளியாகும். அப்படியிருக்கு, 2018ல் 'சாமி 2' படம் வெளியானதையடுத்து, அடுத்ததாக நான்கு வருட இடைவெளிக்குப்பின் அவர் இயக்கிய படம்தான் 'யானை'. 2022ல் வெளியான இப்படத்தில் அருண் விஜய் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றிருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஹரி, 3 பிரம்மாண்ட ஹீரோக்களுடன் இணைந்து அடுத்தடுத்த படத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதலில் நடிகர் விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும், அதை முடித்தபின்பு, நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஷாலுடன் ஏற்கெனவே 'தாமிரபரணி', 'பூஜை' படங்களை இயக்கி வெற்றிபெற்றுள்ள நிலையில், நடிகர் கார்த்தியை வைத்து இப்போதுதான் முதன்முதலாக இயக்கவிருக்கிறார்.

இந்த இருபடங்களும் முடிந்த பிற்பாடு, நடிகர் சூர்யாவை வைத்து படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹரி இயக்கத்தில் படங்கள் மிகக்குறைவாகவே வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரது கைவசம் 3 நாயகர்களின் படங்கள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.