எங்கள் திருமணம் மூலம் நிறைய பேர் சம்பாதித்து விட்டனர்... தயாரிப்பாளர் ரவீந்தர் சொல்கிறார்

சென்னை: நிறைய பேர் சம்பாதித்து விட்டார்கள்... ‘எங்கள் கல்யாணத்தின் மூலம் நிறைய பேர் சம்பாதித்துவிட்டார்கள்’ என தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கூறினார்.

கடந்த 2 வாரங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் திருமணம்தான். இவர் டி.வி. நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துள்ளார். இருவருக்குமே இது 2-வது திருமணம்.இவர்களது திருமணம் பரபரப்பாக பேசப்பட்டதற்கு காரணம் ரவீந்தர் சந்திரசேகரின் கனத்த தோற்றம்தான்.

ஆனாலும் விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்டு என்னை திருமணம் செய்து கொள்ள பெரிய போட்டியே இருக்கிறது என்று கூலாக பதில் சொல்லி அனைவருக்கும் பதிலடி கொடுத்தார், ரவீந்தர் சந்திரசேகர். திருமணம் தொடங்கி தற்போது இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் பரவி வருகிறது.

இதற்கிடையில் தனது திருமணம் குறித்து ரவீந்தர் சந்திரசேகர் மனம் திறந்து கூறியதாவது: எல்லாரையும் போலத்தான் எனக்கும் திருமணம் நடந்துள்ளது. இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது.

இருந்தாலும் இதை மிகப்பெரிய சம்பவமாக மாற்றிவிட்டார்கள். எங்களது திருமணம் பற்றிய தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலர் பணம் சம்பாதித்துவிட்டார்கள். ஆனாலும் எனக்கு மகிழ்ச்சிதான். இதன் மூலம் எனக்கும் ஒரு 'பிரேக்' கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட ஒரு உச்ச நட்சத்திரத்துக்கு (நயன்தாரா-விக்னேஷ் சிவன்) திருமணம் நடந்தது. ஆனால் அதைவிட பெரிய பேசும் பொருளாக எனது திருமணத்தை மாற்றி விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.