அரசின் நிபந்தனை எனது மனதை மிகவும் பாதித்தது; பிரபல நடிகர் அமிதாப்பச்சன்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 வயதை தாண்டியவர்கள் பங்கேற்க கூடாது என்று மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்ததை எதிர்த்து கோர்ட்டில் தொடர்ந்து வழக்கில் அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு 65 வயதுக்கு மேற்பட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது:- 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை எனது மனதை மிகவும் பாதித்தது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்ல கூடாது. அவர்கள் வேலை செய்ய லாயக்கு இல்லாதவர்கள் என்று அரசு நிர்வாகம் முடிவு செய்தது.

அப்படியென்றால் என்னைபோன்ற 78 வயதுக்காரர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? இது மிகவும் கஷ்டமான முடிவு. இந்த தடையை திரைப்பட சங்கம் கோர்ட்டுக்கு கொண்டு சென்று தீர்ப்பின் மூலம் நீக்கியதால் பிரச்சினை தீர்ந்து விட்டது.

ஆனால் கோர்ட்டு தடையை நீக்குவதற்கு முன்னால் என்னை போன்றவர்கள் மனரீதியாக எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்? நாங்கள் சினிமாதான் தொழில் என்று இருக்கிறோம். நடிப்பை விட்டு நான் வேறு தொழில் செய்வதற்கு ஏதாவது வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள். இவ்வாறு அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.