சமூக வலைத்தளத்தில் மீண்டும் களமிறங்குகிறார் நடிகர் சிம்பு!

நடிகர் சிம்பு தனது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வபோது தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார். அப்போது அவர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யும் ஒருசில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திடீரென சிம்பு சமூக வலைத்தளத்தில் இருந்து தற்போதைக்கு விலகுவதாக அறிவித்தார். எனினும் தன்னுடைய டுவிட்டர் பக்கம் தனது ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு திரும்புவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்திற்கு அவர் நேரடியாக வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 22ஆம் தேதி காலை 9.09 மணி முதல் சிம்பு நேரடியாக சமூக வலைத்தளத்தில் மீண்டும் களமிறங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு அவரது படங்கள் குறித்த தகவல்கள் அந்த பக்கத்தில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.