விவசாயின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த நடிகர் சோனு சூட்!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது விவசாயம் செய்ய முடிவு செய்தார். ஆனால் அவரிடம் காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லை. இதனால் அவர் வேறு வழியின்றி பள்ளியில் படிக்கும் தனது இரண்டு மகள்களின் உதவியோடு நிலத்தை உழுதார். அவருடைய இரண்டு மகள்களும் ஏர் உழ, அவரது மனைவி பின்னால் விதைகளை தூவி வந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த வீடியோவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், அந்த விவசாயி குடும்பத்திற்கு தான் உதவி செய்ய விரும்புவதாகவும் அவர்கள் கொடுத்த தகவலை அனுப்பினால் அந்த விவசாயி வீட்டில் நாளையே இரண்டு காளை மாடுகள் நிற்கும் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து நெட்டிசன்கள் அந்த விவசாயி குறித்த தகவல்களை கண்டுபிடித்து அவருக்கு அனுப்பினர்

இந்த நிலையில் இரண்டு காளை மாடுகள் வாங்கி தருவதாக கூறிய நடிகர் சோனு சூட், அந்த விவசாயி குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு புத்தம் புதிய டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். நேற்றிரவே அவரது வீட்டின் முன் சோனு சூட் வாங்கி கொடுத்த புத்தம் புது டிராக்டர் வந்து நின்றது.

நேற்று வரை இரண்டு காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லாமல் இருந்த அந்த விவசாயி குடும்பத்தினர் இன்று ஒரு டிராக்டருக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அந்த விவசாயி குடும்பத்தினர்கள் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அந்த விவசாயியின் இரண்டு மகள்களின் கல்விச்செலவை முழுமையாக தான் ஏற்று கொள்வதாக சோனு சூட் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் பல குடும்பங்களுக்கு உதவி வரும் சோனு சூட், தற்போது ஒரு விவசாயி குடும்பத்தினர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். சோனு சூட் அவர்களின் இந்த உதவியை கேள்விப்பட்ட முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.