வெற்றிமாறன் கதையில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் சூரி

சென்னை: வெற்றிமாறன் கதையில் மீண்டும் நாயகனாகிறார் நடிகர் சூரி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சூரியை கதாநாயகனாக வெற்றிமாறன் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து கதாநாயகனுக்கான வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் வெற்றிமாறன் கதையில் 3வது படத்தில் கதாநாயகனாக நடிகர் சூரி நடிக்க உள்ள என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் 50 புரோட்டா சாப்பிடும் போட்டியின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் சூரி. தன்னுடைய எதார்த்த பேச்சாலும், நடிப்பாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெறத் தொடங்கினார். பிறகு தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக மாறினார்.

இந்த நிலையில் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சூரி. விடுதலை திரைப்படத்தில் சூரியின் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டது மட்டுமல்லாமல். இந்த திரைப்படம் தமிழ் திரை உலகம் சூரி மீது கொண்டிருந்த பார்வையை மாற்றியது.

இதை அடுத்து குணச்சித்திர வேடங்களிலும், கதாநாயகனாகவும் சூரியை நடிக்க வைக்க இயக்குனர்கள் பலரும் கால்சீட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் விடுதலை இரண்டாம் பாகத்தில் தற்போது சூரி கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை கும்பகோணத்தில் உள்ள கோயில் ஒன்றில் நடைபெற்றது. இதில் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பெயர் வைக்கப்படாத இந்த புதிய படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்க, நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சசிகுமார், உன்னி முகுந்தன் நடிக்க உள்ளனர். மேலும் படத்திற்கு ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்திற்கான கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வெற்றி மாறன் கதையில் நடிகர் சூரி மூன்றாவது முறையாக கதாநாயகனாக நடித்த ஒப்பந்தமாகி உள்ளார்.