மீண்டும் வெற்றி மாறனுடன் கைகோர்க்கும் நடிகர் சூரி

சென்னை: மீண்டும் கூட்டணி... வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்த நடிகர் சூரி, மீண்டும் வெற்றிமாறனுடன் இணையவிருக்கிறார்.

பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூரி. 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் அவர் நடித்த பரோட்டா காமெடி தமிழக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதையடுத்து தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவகார்த்திகேயன் என பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்துவந்தார்.

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அப்படத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கதாநாயகனாக நல்ல வரவேற்பைப் பெற்றார்.

'விடுதலை' படத்தின் முதல் பாகம் தற்போது வெளியான நிலையில், 2ம் பாகம் இன்னும் வெளியாகாத நிலையில், சூரிக்கு ஏற்கெனவே வேறு படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், வெற்றிமாறன் எழுதிய கதையில் சூரி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதவாது துரை செந்தில்குமார்தான் வெற்றிமாறன் எழுதிய கதையை இயக்க இருப்பதாகவும், அந்தப் படத்தில் சூரி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் என்ற பிரம்மாண்ட இயக்குநரின் படைப்பில் சிலருக்கு மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது மீண்டும் வெற்றிமாறனுடன் சூரி இணையவிருப்பதால், இதுவும் அவருக்கு ஒரு முக்கிய படமாக அமையும் என்றே நம்பலாம்.