படப்பிடிப்புக்காக லண்டன் சென்ற நடிகர் தலைவாசல் விஜய்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை. திரைப்பட படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது படப்பிடிப்புக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'பெல்பாட்டம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை இங்கிலாந்து நாட்டில் நடத்துவதற்காக படக் குழுவினர் சமீபத்தில் மும்பையில் இருந்து கிளம்பி சென்றனர்

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தமிழ் நடிகர் தலைவாசல் விஜய் நடிக்க உள்ளதை அடுத்து அவரும் படக்குழுவினருடன் லண்டன் சென்றார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. விமான நிலையத்தில் ஒருவர் கூட எங்களை வரவேற்க வரவில்லை. நாங்களே எங்களுடைய லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்றோம்.

மேலும் ஒவ்வொரு நடிகரும் தனிமைப்படுத்துதல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மருத்துவர் ஏற்பாடு செய்துள்ளனர். படப்பிடிப்பிற்கு முன்னர் முழு அளவில் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் ஜங்கிள் படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் இரண்டாவது நேரடி இந்திப் படம் இதுதான். இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் சிறப்பு தோற்றம் தான் என்றாலும் முக்கிய வேடம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மேல் என்னுடைய கேரக்டர் குறித்து கூறமுடியாது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட படம். இவ்வாறு தலைவாசல் விஜய் கூறியுள்ளார்.