நடிகர் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து

சென்னை: படப்பிடிப்பு தளத்தில் விபத்து... நடிகர் விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விஷால் ‘லத்தி’ படத்தைத் தொடர்ந்து விஷால் ‘மார்க் ஆண்டனி’ என்னும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்து வருகிறார்கள்..

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பில், லாரி சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது. லாரி நிற்காமல் வருவதை பார்த்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரண்டு புறமும் சிதறி ஓடினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே லாரி நிற்கவில்லை என படக்குழு சார்பில் கூறப்படுகிறது.

முன்னதாக இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் எனவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.. சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.