அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி

சென்னை: நடிகர்கள் சூர்யா, கார்த்தி இரங்கல்... நடிகர் அஜித்தை சந்தித்து அவரின் தந்தை சுப்பிரமணியம் மறைவிற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24-ஆம் தேதி வெள்ளிக் கிழமை அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித் குமாரின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

நடிகர் விஜய்யும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு அஜித் தந்தையின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்று, அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் அஜித்தின் தந்தை இறந்த அன்று நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் சென்னையில் இல்லாத நிலையில், அஜித் தந்தை இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து சென்னை திரும்பிய சூர்யாவும், கார்த்தியும், நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறினர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.